காட்டாறும் கொன்றையும் 4181. | வழை துறு கான யாறு, மா நிலக் கிழத்தி, மக்கட்கு உழை துறு மலை மார்க் கொங்கை சுரந்த பால் ஒழுக்கை ஒத்த; விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி, குழைதொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த, கொன்றை. |
வழை துறு - சுரபுன்னை மரங்கள் அடர்ந்த; 'கானயாறு - காடுகளில் பெருகிய நதிகள்; மாநிலக் கிழத்தி - நிலமகள்; மக்கட்கு - தன் மக்கள் பொருட்டு; உழை துறு மலை மாக் கொங்கை - புடை பருத்த மலைகளாகிய தன் பெரிய மார்பகத்திலிருந்து; சுரந்த பால் ஒழுக்கை ஒத்த - (அன்பினால்) சுரந்து பெருகவிட்ட பாலின் தாரைகளைப் போன்று இருந்தன; கொன்றை - (பொன் போன்ற மலர்கள் பூக்கும்) கொன்றை மரங்கள்; விழைவுறு வேட்கையோடும் - (பொருட்களை) விரும்பும் ஆசையால்; வேண்டினர்க்கு உதவ வேண்டி - வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டி; குழைதொறும் கனகம் தூங்கும் - தளிர்கள்தோறும் பொன்னைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்; கற்பகம் நிகர்த்த - கற்பக மரங்களை ஒத்தன. நிலமகளுக்கு மலைகளைக் கொங்கைகளாகக் கூறும் இலக்கிய மரபு உண்டு. 'பணைத்தோள் மாநில மடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல' (சிறுபாண். 1 - 2); 'சோதி மதி வந்து தவழ் சோலை மலையொடு இரண்டாய், மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே' (திருவேங்கடமாலை-2) 'கொங்கையே பரங்குன்றமும் கொடுங்குன்றும்' (திருவிளை - நகர -2); எனப் பலரும் கூறுதல் காண்க. மக்கட்கு நிலமகளின் கொங்கை சுரந்த பாலொழுக்கை ஆறு ஒக்கும் என்றார். 'சரயு என்பது தாய்மலை அன்னது' (23); ''சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரைபுனல் கன்னிகொண்டு இழிந்த தென்பவே'' (சீவக - 39) என்றமை காண்க. இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி அமைந்தது. மாநிலக் கிழத்தி, மலைமாக் கொங்கை என்பன உருவகங்கள். 34 |