தேனீ 4185. | சரத நாள்மலர் யாவையும் குடைந்தன, தடவிச் சுரத நூல் தெரி விடர் என, தேன் கொண்டு தொகுப்ப, பரத நூல் முறை நாடகம் பயன் உறப் பகுப்பான், இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின - தேனீ. |
சுரத நூல் தெரி விடர் என - காம நூலை அறிந்த காமுகர் போல; சரத நாள் மலர் யாவையும் - தேனுடன் கூடிய அன்றலர்ந்த மலர்கள் யாவற்றையும்; குடைந்தன தடவி - மூக்கால் குடைந்து தடவி; தேன் கொண்டு - (அவற்றினின்று) தேனைக் கொண்டு சேகரித்து; தொகுப்ப - தொகுப்பவனாகிய; தேனீ - தேனீக்கள்; பரத நூல் முறை - பரத சாத்திரத்தில் கூறிய முறைப்படி; நாடகம் - நாடகத்தை; பயன் உறப் பகுப்பான் - (காண்பவர்கள்) பயன் பெறுமாறு பாகுபாடுக்ள அமையச் செய்தல் பொருட்டு; இரதம் ஈட்டுறும் - ஒன்பான் சுவைகளையும் ஒன்றுகூட்டி இயற்றுகின்ற; கவிஞரைப் பொருவின - கவிஞர்களை ஒத்தன. தேன்நிறைந்த புதுமலர்களைக் கோதி தேனைச் சேகரிக்கும் தேனீக்கள் பல மகளிரிடத்து இன்பம் துய்க்கும் காமுகரை ஒத்தன. மேலும் அத்தேனீக்கள் தாம் பெற்ற தேன்துளிகளைத் தேனடையாக அமைப்பது ஒன்பான் சுவைகளைக்கூட்டி நாடகம் இயற்றும் நாடகக் கவிஞன் செயலை ஒத்தது. இஃது உவமை அணி. விடர் - தீய ஒழுக்கமுடைய காமுகர். மாதரை மலராகவும் மைந்தரை வண்டாகவும் கூறுதல் உண்டு. ''மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி, போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய, உதயகுமரனாம் உலகாள் வண்டின்'' (மணி - 17 - 25 - 27) ''ஒரு தனி ஓங்கிய திருமணிக்காஞ்சி. . . . காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது; உதய குமரன் எனும் ஒரு வண்டு உணீஇய'' (மணி - 17 - 56 - 60), 'தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூவதாக, உமிழ்சுடர் வேலினாலும் ஒண்சிறை மணி வண்டொத்தான்' (சீவக - 101) ''பெண்டிர்நலம் வௌவித் தண் சாரல் தாதுண்ணும் வண்டின்'' (கலி. 10 - 24) என்பன ஒப்பு நோக்கத்தக்கன. பரதம் - பாவம், ராகம், தாளம் ஆகிய மூன்றும் கூடியது பரத நாட்டியம் என்பர். நாடகம் - கதை தழுவி வரும் கூத்து. கவிஞர் - நாடகக் காப்யிம் அமைப்பவர். நாடகம் சுவையுற அமைய ஒன்பான் சுவைகளும் அமையக் காப்பியம் இயற்றுவது கவிஞரின் பணியாகும். உவகை, பெருமிதம், அழுகை, வியப்பு, நகை, அச்சம், இளிவரல், வெகுளி, நடுநிலைமை என்பன ஒன்பான் சுவைகள். ரசம் என்னும் சொல் இரதம் எனத் திரிந்து வந்தது. 38 |