பசும்புல் எழுச்சி; மயிலின் அகவல்

4190. உற வெதுப்புறும் கொடுந்தொழில்
      வேனிலான் ஒழிய,
திறம் நினைப்ப அருங்கார்
      எனும் செவ்வியோன் சேர,
நிற மனத்து உறு குளிர்ப்பினின்,
      நெடு நில மடந்தை,
புற மயிர்த்தலம் பொடித்தன
     போன்றன - பசும்புல்.

     பசும் புல் - பசுமையான புல்லின் தொகுதி; உற வெதுப்புறும் -
மிகவும் வெதுமபச் செய்த; கொடுந்தொழில் - கொடிய தொழிலை உடைய;
வேனிலான் ஒழிய -
வேனிற்காலம் என்னும் கொடுங்கோல் அரசன்
நீங்கினானாக; நினைப்ப அரும் திறம் - நினைத்தற்கு அரிய
மேன்மையுடைய; காரெனும் செவ்வியோன் - கார்காலம் என்னும்
செம்மையான குணங்களையுடையவன்; சேர - (அரசனாய்) வந்து சேர;
நெடுநில மடந்தை -
பெரிய நிலமாகிய நங்கை; நிற மனத்து உறு -
மாட்சிமை பெற்ற மனத்தில் கொண்ட; குளிர்ப்பினின் - மகிழ்ச்சியால்; புறம்
பொடித்தன -
உடம்பு முழுவதும் சிலிர்த்தனவான; மயிர்த்தலம் போன்றன -
மயிர்களைப் போன்றன.

     வெயிலால் வறண்ட நிலத்தில் மழை பெய்வதலால் புல் முளைத்ததை,
நில மங்கை மகிழ்ச்சியால் உடல் சிலிர்த்ததாகக் கூறியதால் இது தற்குறிப்பேற்ற
அணி.  மயிர் சிலிர்த்தல் - மகிழ்ச்சியாலும் குளிர்ச்சியாலும் ஆவது.
காலத்தை அரசனாக உருவகிப்பது கவி மரபாகும்.  உலகத்தின் ஆக்கல்,
அழித்தலுக்குத் துணைக் காரணமாகக் காலம் இருப்பதால் அதனை அரசன்
என்றார்.  'இன் இளவேனில் இளவரசாளன்' (சிலப் - 8.57), 'கார் அரசாளன்'
(சிலப்-14.96), 'பனி அரசுயாண்டுளன' (சிலப் - 14.112), 'இன் இளவேனில்
யாண்டு உளன்', (சிலப் - 14 - 117) என்றனவும் காண்க.  நிலத்தை
மடந்தையாக உருவகித்தலைத் ''திரை நீர் ஆடை இருநிலமடந்தை'' (சிலப் - 4
- 7)  என்ற தொடரும் உணர்த்தும்.  கார் கைம்மாறு கருதாது மழை பொழிந்து
நன்மை செய்தலின் 'நினைப்ப அரும்திறம் காரெனும் செவ்வியோன்' என்றார்.
வெப்பம் கொடுத்து மிகுந்த துன்பம் விளைத்த லால் 'கொடுந்தொழில்
வேனிலான்' என்றார்.  வேனிலின் வெம்மையும் காரின் தன்மையும் ஏற்ற
அடைமொழிகளால் உணர்த்தப்பட்டன.  மகிழ்ச்சியாலும், குளிர்ச்சியாலும்
உடம்பில் மயிர் சிலிர்த்தல் இயல்பாகும்.  'இவன், அடித்தலம் தீண்டலின்
அவனிக்கு அம்மயிர், பொடித்தன போலும் இப்புல்' என்று உன்னுவாள்' (2750)
என இதே கற்பனை முன்னும்வந்தது.                               43