4197.அளவு இல் கார் எனும் அப்
      பெரும் பருவம் வந்து அணைந்தால்,
தளர்வர் என்பது தவம்
     புரிவோர்கட்கும் தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
      குழைந்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன், வருந்தும்என்றால்,
      அது வருத்தோ?

     அளவு இல் கார் எனும் - எல்லையில்லாத சிறப்பை உடைய
கார்காலம் என்கின்ற; அப்பெரும் பருவம் - அந்தப் பெருமைமிக்க காலம்;
வந்து அணைந்தால் - வந்து சேர்ந்தால்; தளர்வர் என்பது - மனவுறுதி
இழந்து தவிப்பர் என்று கூறுவது; தவம் புரிவோர்கட்கும் தகுமால் -
(முற்றும் துறந்து) தவம் செய்யும் முனிவர்களுக்கும் பொருந்தும்
ஆதலால்; கிளவி - தன் சொற்களை; தேனினும் அமிழ்தினும் - தேனிலும்
அமிழ்தத்திலும்; குழைத்தவள் - குழைத்துப் பேசும் சீதையின்; கிளைத்
தோள்
- மூங்கில் போன்ற தோள்களை; வளவி உண்டவன் - தழுவி இன்பம்
துய்த்த இராமன்; வருந்தும் என்றால் - (கார் காலத்தில்) வருந்துவான்
என்றால்; அது வருத்தோ - அவ்வருத்தம் எளிய வருத்தமாக
எண்ணப்படுமோ?

     இலக்கணம் கூறும் ஆறு பெரும்பொழுதுகளில் கார் காலம் ஒன்றாதலின்
அதனைப் 'பெரும்பருவம்' என்றார். இக்காலம் பிரிந்தார்க்குப் பெருந்துன்பம்
விளைத்து நீண்ட பொழுதாகத் தெரியச் செய்வதால் அளவால் பெரும்பருவம்
எனவும் கொள்ளலாம். 'அ' என்பது  உலகறி சுட்டு. 'அணைந்தால்'என்ற
சொல் பிரிந்தவர்கள் கூடி அணையும் காலம் என்பதைக் குறிப்பால் உணர்த்தல்
காண்க. தவம் புரிவோர்கட்கும் என்பதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பும்மை;
சீதையின் மொழிக்குத் தேனும் அமிழ்தும் குழைத்தது உவமை. 'அன்னம்
அன்னாள் அமுது உகுத்தனைன செய்ய வாயிடை மழலை இன்சொல்' (3303),
'குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவி' (சிலப்-2.58),
'கரும்பும் தேனும் அமுதும் பாலும் கலந்த தீஞ்சொல்' (சிந்தா-2438), 'தேனும்
ஆரமுதும் குயிலினின் குரலும் கிளியினின் மொழியும் குழலும் யாழும்
குழைத்து இழைத்து' (அரிச்.4-12) என்பன ஒப்பு நோக்கத் தக்கன.
கிளைத்தோள் வளவி உண்டவன்-என்பதில் உண்ணுதற்குரியதல்லாத பொருளை
உண்டதாகக் கூறினார். 'உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக்
கூறலும் மரபே' (தொல்.பொரு.213) என்றது காண்க. 'தோள் நலமுண்டு
துறக்கப்பட்டார்' (கலி-23) என்பது கலித்தொகை.   50