4245. | 'மனத்தினின் உலகு எலாம் வகுத்து, வாய்ப் பெயும் நினைப்பினன் ஆயினும், நேமியோன் நெடும் எனைப் பல படைக்கலம் ஏந்தி, யாரையும், வினைப் பெருஞ் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால். |
நேமியோன் - (மற்றும்) அத்திருமால்; மனத்தினின் - திருவுள் ளத்தில் நினைத்த மாத்திரத்தில்; உலகு எலாம் வகுத்து - உலகங்களை எல்லாம் படைத்து; வாய்ப் பெயும் - வாயில் போட்டு உண்ணத்தக்க; நினைப்பினன் ஆயினும் - சங்கற்ப வலிமை உடையவனாயினும்; எனைப்பல நெடும் படைக்கலம் ஏந்தி - (அங்ஙனம் செய்யாமல்) வேறு பல பெரிய ஆயுதங்களைக் கையிற் கொண்டு; யாரையும் - (கொடிய வர்கள்) அனைவரையும்; வினைப் பெரும் சூழ்ச்சியின் - போர்த் தொழிலுக்குரிய சூழ்ச்சிகளோடு; பொருது வெல்லும் - போர் செய்தே வெற்றி கொள்வான். தான் பரமபதத்தில் அல்லது பாற்கடலில் இருந்தவாறே தன் மனத்தால் நினைத்த அளவில் சங்கற்ப மாத்திரையில் - அனைவரையும் அழிக்க வல்லவனாயினும், திருமால் அங்ஙனம் செய்யாது பல படைக்கருவிகளைக் கொண்டு பகைவர்கள் உள்ள இடம் சென்று இடத்திற்கேற்பச் சூழ்ச்சித் திறத்தோடு போர் செய்தல் அவதார தத்துவம். சூழ்ச்சி - தந்திரம்; கொடியவர்கள் செய்யும் மாயைகளுக்கு ஏற்ப மாயை செய்து போர்புரிதல். உலகு - இடத்தையும் உயிர்களையும் உணர்த்திற்று. வகுத்தல் - படைத்தல்; வாய்ப்பெய்தல் - அழித்தல். 'உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்' (திருவாய் - 4 - 5 - 10) என்றது காண்க. பெயும் - பெய்யும்; தொகுத்தல் விகாரம். நேமியான் - சக்கரபாணி. பிறிதுமொழிதலணி. 98 |