4255. மேகம் மா மலைகளின்
      புறத்து வீதலால்,
மாக யாறு யாவையும்
      வாரி அற்றன;
ஆகையால்,  தகவு இழந்து, அழிவு
      இல் நன் பொருள்
போக, ஆறு ஒழுகலான்
      செல்வம் போன்றவே.

     மேகம் - கருமேகங்கள்; மா மலைகளின் புறத்து - பெரிய மலைகளின்
மேல்புறத்தினின்று; வீதலால் - நீங்கிவிட்டதால்; மாக யாறு யாவையும் -
அம்மலைகளின் மேலிடத்தில் பெருகிய ஆறுகளெல்லாம்; வாரி அற்றன -
நீர்ப்பெருக்கு அற்றன; ஆகையால் - ஆதலால் அவை; தகவு இழந்து -
பெருமை இழந்து; அழிவில் நன்பொருள் போக - தன்னிடத்துள்ள அழியாத
நல்லபொருள் அழிந்துபோமாறு; ஆறு ஒழுகலான் - அறநெறியில்
ஒழுகாதவனுடைய; செல்வம் போன்ற - செல்வத்தை ஒத்தன.

     செல்வம் மிகுதியாகப் பெற்றவர்கள் செருக்குக் கொண்டு பெருந்தன்மை
இழந்து அறநெறியில் ஒழுகார் எனின் அவர்கள் பெற்ற செல்வம் சிறிது
சிறிதாக அவர்களை விட்டு நீங்கல் போல, மழை நீங்க ஆறுகளிலும் நீர்ப்
பெருக்கு அற்றுப் போயிற்று.  உவமை அணி, ''திறத் திறனாலே செய்தவம்
முற்றித் திரு உற்றாய் . . . . அறத் திறனாலே எய்தினை அன்றோ?  அது
நீயும், புறத்திறனாலே பின்னும் இழக்கப் புகுவாயோ?'' (3246) என இராவணன்
தீநெறியில் ஒழுகிப் பெற்ற செல்வத்தை இழக்கப் போகும் நிலையை மாரீசன்
உணர்த்துவது இங்குக் காணத் தக்கது.  ஆறு ஒழுகலான் - அறநெறியில்
ஒழுகாதவன் என்பதால், தீநெறியில் ஒழுகுபவன் என்பது பெறப்படுகிறது.
அழிவில் நன் பொருள் போக என்ற தொடருக்கு அழிவில்லாத நல்ல
புண்ணியம் கழிந்துவிட' என்றும் பொருள்கொள்வர்.                  108