4258. | மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றவான், அந் நெறிப் பருவமும் நணுகிற்று ஆதலால், ''பொன்னினை நாடிய போதும்'' என்பபோல், அன்னமும், திசை திசை அகன்ற, விண்ணின்வாய். |
மன்னவன் தலைமகன் - தசரத சக்கரவர்த்தியின் முதல் மகனாகிய இராமபிரானின்; வருத்தம் மாற்றுவான் - துன்பத்தை மாற்றுவதற்குரிய; அந்நெறிப் பருவமும் - அந்த நெறிப்பட்ட முன்பனிக் காலமும்; நணுகிற்று - வந்துவிட்டது; ஆதலால் - ஆகையினாலே; பொன்னினை நாடிய போதும் - பிராட்டியைத் தேடிச் செல்வோம் (யாம்); என்ப போல் - என்று சொல்லிப் புறப்பட்டன போல; அன்னமும் - அன்னப்பறவைகளும்; விண்ணின் வாய் - வானத்தில்; திசை திசை அகன்ற - திசைகள் தோறும் பறந்து சென்றன. மழைக் காலத்தில் குளிர் தாங்காது அன்னப் பறவைகள் ஒடுங்கிக் கிடக்கும். தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம், மாமரம் நிரைத்தொகு பொதும்பர் உழை வைக' (4228) என அவை நீர்நிலைகளை விடுத்துப் பொதும்பரில் தங்கியமை முன்னர்க் கூறப்பட்டது. மழை நீங்கிய அளவில் அவை விண்ணில் பறந்து தாம் விரும்பிய திசைகளுக்குச் சென்றன. இயல்பாக நிகழும் இச்செயலைச் சீதையைத் தேடுவதற்காகப் புறப்பட்டன என்று கூறியது தற்குறிப்பேற்ற அணி. வானர வீரர்களுக்கு முன்னாகப் பறவைகளும் சீதையைத் தேடிப் புறப்பட்டன என்பது உணர்த்த 'அன்னமும்' என்று உம்மை கொடுத்தார். எல்லா உயிர்களும் இராமபிரான் இன்ப துன்பங்களில் பங்கு கொள்வதாகக் கூறும் கவிநயம் காண்க. வருத்தம் - சீதையின் பிரிவால் ஏற்பட்ட துனபம். பொன் - செல்வத்திற்கு உரிய கடவுளாகிய திருமகளின் அவதாரமான சீதை. அன்னமும் - உம்மை எதிரது தழுவிய எச்சப் பொருளது; திசை திசை - அடுக்குத் தொடர். 111 |