4272. | ' ''வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து, இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற் கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள் அம்பும் உண்டு'' என்று சொல்லு, நம் ஆணையே. |
வெம்புகண்டகர் - மனம் கொதிக்கும் கொடியவர்கள்; விண்புக வேர் அறுத்து - (போரில் மடிந்து) வீர சொர்க்கம் அடையும்படி (அவர்களை) வேரொடு அழித்து; இம்பர் நல்லறம் செய்ய - இவ்வுலகில் முறையான தருமத்தை நிலைநிறுத்தும் பொருட்டு; எடுத்த விற்கொம்பும் - (நாம்) கையில் ஏந்திய வில் தடியும்; உண்டு - (நம்மிடம்) உள்ளது; அருங்கூற்றமும் உண்டு- (யாராலும் தடுக்கமுடியாத) இயமனும் இருக்கிறான்; உங்கள் அம்பும் உண்டு- (வானரங்களாகிய) உங்களைக் கொல்லக் கூடிய வாலியைக் கொன்ற அம்பும்(எம்மிடம்) இருக்கின்றது; என்று நம் ஆணை - என்று நமது கட்டளையாக; சொல்லு - (சுக்கிரீவனிடம்) சொல்வாய். விராதன் முதலான அரக்கர்களையும் வாலியையும் கொன்ற வில்லும் அம்பும் கொண்டே சுக்கிரீவனையும், அவனுடைய வானரப் படைகளையும் இயமனுக்கு இரையாக்க முடியுமென்பதைச் சொல்லுமாறு இலக்குவனிடம் இராமன் உரைத்தான் என்பது. கண்டகர் - தீயோர். தீயோரை ஒறுத்து நல்லறம் நாட்டுதல் ஆகிய அவதாரப்பாங்கு இங்கே புலப்படுவது காண்க. 4 |