4280.வெம்பு கானிடைப்
      போகின்ற வேகத்தால்,
உம்பர் தோறும் மராமரத்து
      ஊடு செல்
அம்பு போன்றனன், அன்று -
     அடல் வாலிதன்
தம்பிமேல் செலும்
      மானவன் தம்பியே.

     அன்று - அப்பொழுது; அடல் வாலியின் - வலிமையுள்ள வாலியின்;
தம்பிமேல் செலும் -
தம்பியான சுக்கிரீவனிடம் செல்லுகின்ற; மானவன்
தம்பி -
மனுகுலத் தோன்றலாகிய இராமன் தம்பியான இலக்குவன்; வெம்பு
கானிடை -
வெப்பம் மிகுந்த காட்டிலே; போகின்ற வேகத்தால் - செல்லும்
வேகத்தினால்; உம்பர் தோயும் - வானத்தை அளாவி நின்ற; மராமரத்து
ஊடு செல் -
ஏழு மராமரங்களின் இடையே துளைத்துச் சென்ற; அம்பு
போன்றனன் -
(இராம) பாணத்தை ஒத்திருந்தான்.

     இராம பாணம் ஏழு மராமரங்களைத் துளைத்துச் சென்றதுபோல,
இலக்குவன் தான் செல்லும் காட்டு வழியிலுள்ள மரங்களை அழித்துச்
சென்றான் என்றபடி.  உவமையணி, உம்பர் தோயும் மராமரம் - உயர்வு
நவிற்சி.                                                     12