வானரர் அங்கதனுக்குச் செய்தி அறிவித்தல் 4284. | கண்ட வானரம் காலனைக் கண்டபோல் மண்டி ஓடின; வாலி மகற்கு, 'அமர் கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான், சண்ட வேகத்தினால்' என்று, சாற்றலும், |
கண்ட வானரம் - (கோபத்தோடு இலக்குன் வருவதைப்) பார்த்த வானரங்கள்; காலனைக் கண்டபோல் - இயமனைக் கண்டது போல (அச்சம் கொண்டு); வாலி மகற்கு - வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி; மண்டி ஓடினர் - நெருக்கி்க் கொண்டு ஓடி; அமர் கொண்ட சீற்றத்து - போரினை மனங்கொண்ட கோபத்துடன்; இளையோன் சண்ட வேகத்தினால் - இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு; குறுகினான் - வந்து சேர்ந்துள்ளான்; என்று சாற்றலும் - என்று சொன்ன அளவில். கோபம் கொண்டவனாக மோதவரும் இலக்குவன் காணப்பட்டதால் அவன் 'அமர்கொண்ட சீற்றத்து இளையோன்' எனப்பட்டான். மண்டியோடுதல் - ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தடித்துக்கொண்டு ஓடுதல். 16 |