அங்கதன் சுக்கிரீவனைத் துயிலெழுப்புதல்

4291.கிடந்தனன் - கிடந்தானைக்
      கிடைத்து இரு
தடங் கை கூப்பினன், தாரை
      முன்நாள் தநத
மடங்கல் வீரன், நல்
      மாற்றம் விளம்புவான்
தொடங்கினான், அவனைத்
      துயில் நீக்குவான்.

     கிடந்தனன் - (சுக்கிரீவன்) தூங்கிக் கொண்டிருந்தான்; கிடந் தானை -
(அவ்வாறு) படுத்திருந்தவனான அவனை; தாரை முன்நாள் தந்த -  தாரை
முன்னாளில் பெற்றெடுத்த; மடங்கல் வீரன் - ஆண் சிங்கம் போன்ற
வீரமுடைய அங்கதன்; கிடைத்து - நெருங்கிச்சென்று; இரு தடக்கை
கூப்பினன் -
(தன்னுடைய) பெரிய கைகளைக் குவித்து அஞ்சலி செய்தவாறு;
அவனைத்துயில் நீக்குவான் -
அந்தச் சுக்கிரீவனைத் தூக்கத்திலிருந்து
எழுப்பி; நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான் - மனத்திற்கு உகந்த
நல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

     கிடந்தனன்: வினைமுற்று: கிடந்தான்: வினையாலணையும் பெயர்.   23