இலக்குவன் சினத்தின் விளைவு 4303. | 'காக்கவோ கருத்து?' என்று, கதத்தினால் பூக்க மூரல், புரவலர் புங்கவன், தாக்கணங்கு உறை தாமரைத் தாளினால், நூக்கினான் அக் கதவினை, நொய்தினின். |
(வானரங்கள் நகர வாயிலை அடைத்ததைப் பார்த்து) புரவலர் புங்கவன்- அரசரில் மேம்பட்டவனான இலக்குவன்; காக்கவோ கருத்து என்று - (என்னிடமிருந்து தம்மைப்) பாதுகாத்துக் கொள்ளவோ (இவர்கள்) கருதியது என்று எண்ணி; கதத்தினால் மூரல் பூக்க - கடுங்கோபத்தால் எள்ளற் சிரிப்புத் தோன்ற; தாக்கணங்கு உறை - திருமகள் வசிக்கின்ற; தாமரைத் தாளினால் - செந்தாமரை போன்ற தன் திருவடியால்; அக் கதவினை - அவ் வாயிற் கதவை; நொய்தி னில் நூக்கினான் - மிக எளிமையாகத் தள்ளினான். இலக்குவனின் திருவடிக்கு இலக்குமி உறையும் தாமரை உவமையாகியது. அணங்கு - மகளிரில் சிறந்தவர், பெண் தெய்வம் 'அறம் செய்வோர்பால் அருளினால் பற்றியிருக்கும் திருமகள்' என்று தாக்கு அணங்கு என்பதற்குக் கம்பன் கழகப் பதிப்பு விளக்கம் தருகிறது. தாக்குதல் - பற்றியிருத்தல். 35 |