இலக்குவன் மகளிரைப் பார்க்க அஞ்சுதல்

ஆசிரிய விருத்தம்

4315. ஆர்க்கும் நூபுரங்கள் பேரி, அல்குல்
      ஆம் தடந் தேர் சுற்ற,
வேற் கண் வில் புருவம
      போர்ப்ப மெல்லியர் வளைந்தபோது,
பேர்க்க அருஞ் சீற்றம் பேர,
      முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்,
பார்க்கவும் அஞ்சினான், அப்
      பனையினும் பெரிய தோளன்.

     ஆர்க்கும் நூபுரம் பேரி - ஆரவாரிக்கின்ற காற் சிலம்புகள் பல
வகைப் பேரிகைகளாக முழங்க; அல்குல் ஆம் தடந்தேர் - அல்குலாகிய
பெரிய தேர்; சுற்ற - கவிந்து கொள்ள; வேற்கண் - கண்கள் வேற்
படைகளாகவும்; வெம் புருவப் போர்வில் - கொடிய புருவங்கள் போர்
செய்யும் விற்படைகளாகவும் (அமைய); மெல்லியர் வளைந்தபோது -
மகளிரது சேனை சூழ்ந்துகொண்ட பொழுது; அப் பனையினும் உயர்ந்த
தோளான் -
பனையை விட நெடிய தோள்களையுடைய அந்த இலக்குவன்;
பேர்க்க அரும் -
(யாராலும்) மாற்றமுடியாத; சீற்றம் பேர - கோபம் தணிய;
முகம் பெயர்ந்து -
முகத்தை ஒரு புறமாகத் திருப்பிக் கொண்டு; ஓதுங்கிற்று
அல்லால் -
ஒதுங்கி நின்றதேயல்லாமல்; பார்க்கவும் அஞ்சினான் - (அப்
பெண்களைக்) கண்ணால் பார்ப்பதற்கும் அச்சமுற்றான்.

     மகளிர் நேர்பட்ட மாத்திரத்தில் இலக்குவனது முகம் சினம் நீங்கி
இயல்பாக ஆனமை தோன்ற 'முகம் பெயர்ந்து' எனத் தன்வினையால்
கூறினார்.  முதல் இரண்டடிகள் - உருவக அணி.                    47