4318. | 'வெய்தின் நீ வருதல் நோக்கி, வெருவுறும் சேனை, வீர! செய்திதான் உணர்கிலாது; திருவுளம் தெரித்தி' என்றார்; 'ஐய! நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்; எய்தியது என்னை?' என்றாள், இசையினும் இனிய சொல்லாள். |
இசையினும் - இசையைக் காட்டிலும்; இனிய சொல்லாள் - இனிமையான சொற்களையுடைய தாரை; வீர! நீ வெய்தின் - வீரனே நீ சீற்றத்தோடு; வருதல் நோக்கி - வருவதைப் பார்த்து; சேனை செய்தி தான் உணர்கிலாது - (இந்த) வானர சேனை (நீ) வருகின்ற காரணத்தை (இன்னதென்று) அறியாமல்; வெருவுறும் - அஞ்சும்; திருவுளம் தெரித்தி - (அதன் அச்சம் நீக்குமாறு) உனது மனக் கருத்தை அறிந்து சொல்வாய்; என்றார் - என்று சொன்னார்கள்; ஐய! ஆழி வேந்தன் - ஐயனே! ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும் மன்னனான இராமனின்; அடி இணை - திருவடிகளை; பிரிகலாதாய் நீ - எப் பொழுதும் பிரியாது உடன் தங்கியிருப்பவனாகிய நீ; எய்தியது என்னை - இங்குத் தனியே வந்த செயல் என்ன என்று கேட்டாள். 'வீரனே! நீ கோபத்தோடு வருவதை அறிந்த காரணம் புரியாது வானரசேனை அஞ்சிக் கலங்கியது; இராமனை என்றும் பிரியாத நீ இன்று தனியே பிரிந்த வந்த காரணம் என்ன' என்று தாரை வினவினாள். 50 |