இலக்குவன் தாரையிடம் உரைத்தது

4321.'இனையர் ஆம், என்னை ஈன்ற
      இருவரும்' என்ன வந்த
நினைவினால் அயர்ப்புச் சென்ற
      நெஞ்சினன், நெடிது நின்றான்;
'வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம்
      விளம்பவும் வேண்டும்' என்று, அப்
புனை குழலாட்கு வந்த
      காரியம் புகல்வது ஆனான்;

     என்னை ஈன்ற இருவரும் - என்னைப் பெற்றெடுத்த தாய்மார்
இருவரும்; இனையர்  என்ன - இத்  தன்மையராகவே இருப்பார்கள் என்று;
வந்த நினைவினால் -
மனத்தில் தோன்றிய நினைவால்; அயர்ப்புச்
சென்ற-
வாட்டம் மிக்க; நெஞ்சினன் - மனத்தையுடைய வனாய்; நெடிது
நின்றான்-
நீண்ட நேரம் ஒன்றும் தோன்றாமல் அந்த இலக்குவன் திகைத்து
நின்றான்; வினவினாட்கு எதிர் - (தன்னிடம்) கேள்வி கேட்டவளுக்கு
மறுமொழியாக; ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் - ஒரு வார்த்தை
விடையாகச்சொல்லவும் வேண்டும்; என்று - என்று கருதி; அப் புனை
குழலாட்கு -
அழகிய கூந்தலையுடைய  அத் தாரையை நோக்கி; வந்த
காரியம் -
வந்த செயல் இன்ன தென்று;  புகல்வது ஆனான் -
சொல்லலானான்.

     இலக்குவன் தன் தாயரைப் பற்றிய நினைவால் சிறிது நேரம் ஒன்றும்
பேசாமல் இருந்தான்; பின்பு தன்னை வினவியவளுக்கு விடையளிக்காமல்
இருப்பது தகுதியாகாது என்று தான் வந்த செயலைக் கூற முற்பட்டான்
என்பது.  தாயர் இருவர்; தன் தாயான சுமித்திரையும், இராமன் தாயான
கோசலையும்.                                               53