தாரையின் மறுமொழி 4323. | சீறுவாய்அல்லை - ஐய! - சிறியவர் தீமை செய்தால், ஆறுவாய்; நீ அலால், மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன்; வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து, அவ் எல்லை ஊறுமா நோக்கித் தாழ்த்தான்; உதவி மாறு உதவி உண்டோ? |
ஐய! சீறுவாய் அல்லை - ஐயனே! கோபப்படாமல் இருப்பாயாக; சிறியவர் தீமை செய்தால் - (அறிவு முதலியவற்றால் சிறியவர்கள்) தீமைகள் செய்தால்; ஆறுவாய் - பெரியவனான நீ பொறுத்துக் கோபத்தைத் தணித்துக் கொள்வாயாக; நீ அலால் மற்று ஆர் உளர் - (அவ்வாறு இருப்பதற்கு) உன்னைத் தவிர வேறு யார்தான் இருக்கின்றார்கள்?அயர்ந்தான் அல்லன் - சுக்கிரீவன் தான் சொன்ன சொல்லில் தளர்ந்து விடவில்லை; உலகம் எங்கும் - (வானர சேனை களைத் திரட்ட) உலகத்தின் எல்லா இடங்களிலும்; வேறு வேறு தூதரை - தனித் தனியே வானரத் தூதர்களை; விடுத்து - அனுப்பிவைத்து; அவ் எல்லை - அந்த இடங்களிலிருந்து; ஊறுமா நோக்கி - அச் சேனைகள் வந்து சேர்வதை எதிர்பார்த்துக்கொண்டு; தாழ்த்தான் - தாமதித்திருக்கின்றான்; உதவி மாறு உதவி - (நீங்கள் அச் சுக்கிரீ வனுக்குச்) செய்த உதவிக்குக் கைம்மாறு ஒன்று; உண்டோ - செய்வ தற்கு உள்ளதோ (இல்லை). சிறியவர் தீமை செய்தால் அதைப் பொறுப்பது பெரியவர் கடனாகும். சுக்கிரீவன் செல்வ வாழ்க்கை முதலியவற்றால் மயங்கியுள்ளான் என்று கருதுமாறு இருந்தாலும், அவன் உங்களது உதவியை மறக்கவில்லை; அங்கங்கே தூதரை அனுப்பி வானர சேனையின் வருகையை எதிர்பார்த்துள்ளான்; அதனால் தாமதித்து இருக்கின்றான் என்று தாரை சொன்னாள். உதவி மாறு உதவி: 'செய்யா மற் செய்த உதவி', 'காலத்தினாற் செய்த நன்றி' ஊறு: உறுதல் - முன்னிலை நீண்டது. ஊறுமா றுகர ஈறு குறைந்தது. 55 |