4325.'அடைந்தவர்க்கு அபயம் நீவிர்
      அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து, நும் பணியின் தீர்ந்தால்,
      அதுவும் நும் தொழிலே அன்றோ?
மடந்தை தன் பொருட்டால் வந்த
      வாள் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின், பின்னை,
      நிற்குமோ கேண்மை அம்மா?'

     நீவிர் - நீங்கள்; அடைந்தவர்க்கு அபயம் அருகிய - உங்களைச்
சரணம் அடைந்தவர்களுக்கு அபயம் அருளிக் கொடுத்த; அளவு இல்
செல்வம் -
அளவில்லாத செல்வம்; தொடர்ந்து - சேர்ந்தமையால்
(செருக்குற்று); நும் பணியின் தீர்ந்தால் - உங்களுக்குச் செய்யும் பணியில்
இருந்து விலகினால்; அதுவும் நும் தொழிலே அன்றோ - அதுவும்
உங்களுடைய செயலாகக் கொள்ளத்தக்கதல்லவோ? (தவிர); மடந்தை தன்
பொருட்டால் -
பெண்ணின் (சீதை) காரணமாக; வந்த வாள் அமர்க் களத்து
-
நேரும் கொடிய போர்க் களத்தில்; மாண்டு கிடந்திலர் என்னின் -
(நண்பர்க்காகச் சென்று போர் செய்து) இறந்துகிடவாராயினும்; பின்னும் -
அதன்பின்பும்; கேண்மை நிற்குமே - (இரு சாரார்க்கும்) நட்பு நிலை
பெறுமோ? (பெறாது)

     ஆல், அம்மா: ஈற்றசைகள். நீங்கள் அருள் கொண்டு தந்த வரம்பற்ற
செல்வத்தால் களித்து உங்கள் கட்டளையிலிருந்து தவறினான் என்றே
கொண்டாலும் அந்த நிலையும் நீங்கள் அருளிய செல்வத்தால் விளைந்த
தருக்குத்தானே? என்று நாகரிகமாக நயவுரை பகர்ந்தாள் தாரை.
சுக்கிரீவனுக்கு ஆட்சிச் செல்வத்தோடு மனைவியையும் மீட்டுத் தந்த
இராமனுக்கு, அவன் சீதையை மீட்கும் போரில் பக்கத்தே இருந்து உயிரையும்
கொடுக்குமாறு போர் செய்தால் நட்பை நிறைவேற்றியதாகும்; இல்லாவிட்டால்
உங்களுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்பு நிற்குமோ என்று தாரை இலக்குவனை
நோக்கி வினவினாள் என்பது.  பணியில் தீர்தல் - கட்டளையைப் புறக்கணித்து
மீறுதல்.                                                      57