4326.'செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த
      பேர் உதவி தீரா;
வெம்மை சேர் பகையும்
      மாற்றி, அரசு வீற்றிருக்கவீட்டீர்;
உம்மையே இகழ்வர் என்னின்,
      எளிமையாய் ஒழிவது ஒன்றோ?
இம்மையே வறுமை எய்தி,
     இருமையும் இழப்பர் அன்றே?'

     செம்மை சேர் உள்ளத்தீர்கள் - நேர்மையான சிறந்த மனத்தை
யுடையவர்களான நீங்கள்; செய்த பேருதவி - (சுக்கிரீவனுக்குச்) செய்த
பெரிய உதவி; தீரா - (என்றென்றும்) அழியாமல் இருக்கும்படி; வெம்மைசேர்
பகையும் மாற்றி -
மிகக் கடுமையான பகைவனையும் அழித்து; அரசு
வீற்றிருக்கவிட்டீர் -
அரசாட்சியைப் பெற்றுச் சிறப்பாக அமரும்படி
செய்துவிட்டீர்கள்; உம்மையே - (உங்களால் உதவி  பெற்றவர்) உங்களையே;
இகழ்வர் என்னின் -
புறக்கணிப்பார்களானால்; எளிமையாய் - இழிந்த
குணத்தோடு பொருந்தி; ஒழிவது ஒன்றோ - பெருமை குலைவது மாத்திரமோ;
இம்மையே வறுமை எய்தி -
இப்பிறப்பிலேயே வறுமையடைந்து;
இருமையும்-
இம்மை மறுமைப் பயன்களாகிய இரண்டையும்; இழப்பர்
அன்றே -
இழந்துவிடு வார்களன்றோ?

     செய்த நன்றியை மறந்தவர் இம்மையில் செல்வமும் புகழும் அழிந்து,
மறுமையில் நற்கதி பெறாது நரகத்தையும் அடைவர் என்பது.  பகை -
பண்பாகுபெயர்.  (இம்மையே - தேற்றேகாரம்.  வீறு - வேறொருவர்க்கு
இல்லாத தனிச் சிறப்பு.                                          58