இலக்குவன் வினாவும் அனுமன் விடையும்

4329. வந்து அடி வணங்கி நின்ற
      மாருதி வதனம் நோக்கி,
'அந்தம் இல் கேள்வி நீயும்
      அயர்த்தனை ஆகும் அன்றே,
முந்திய செய்கை?' என்றான்.
      முனிவினும் முளைக்கும் அன்பான்;
'எந்தை கேட்டு அருளுக!' என்ன
      இயம்பினன், இயம்ப வல்லான்:

     முனிவினும் முளைக்கும் அன்பான் - கோபப்பட்ட நிலையிலும் அன்பு
தோன்றும் இயல்பு கொண்ட இலக்குவன்; வந்து அடிவணங்கி நின்ற -
அருகிலே வந்து தன் திருவடிகளை வணங்கி நின்ற; மாருதி வதனம் -
அனுமனின் முகத்தை; நோக்கி - பார்த்து; அந்தம் இல் கேள்வி -
அளவில்லாத கேள்வி ஞானமுடைய; நீயும் - நீயும்; முந்தின செய்கை -
முன்பு நடந்தவற்றை; அயர்த்தனை அன்றோ - மறந்துவிட்டாயல்லவா;
என்றான் -
என்று கேட்டான்; இயம்ப வல்லான் - (அது கேட்டு) சொல்லின்
செல்வனான அனுமன்; எந்தை - எம் தலைவனே; கேட்டு அருளுக
என்னா-
(நான் சொல்வதைக்) கேட்டருளுக என்று சொல்லி; இயம்பினன் -
(மேலும்)கூறலானான்.

     முந்தின செய்கை - மழைக் காலம் கழிந்தவுடன் சுக்கிரீவன்
சேனையோடு இராமனுக்கு உதவ வரவேண்டும் என்பது.                  61