4331. | 'ஐய! நும்மோடும், எங்கள்அரிக் குலத்து அரசனோடும், மெய் உறு கேண்மை ஆகி, மேலை நாள் விளைவது ஆன செய்கை, என் செய்கை அன்றோ? அன்னது சிதையும் ஆயின், உய் வகை எவர்க்கும் உண்டோ? உணர்வு மாசுண்டது அன்றோ?' |
ஐய - ஐயாவே; நும்மோடும் - உங்களுக்கும்; எங்கள் அரிக் குலத்து அரசனோடும் - வானரக் கூட்டமாகிய எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கும்; மெய் உறு கேண்மை - (ஒருவரோடு ஒருவர்க்கு) உண்மையான நட்பு; ஆக- உண்டாகும்படி; மேலைநாள் விளைவதாய - முன்னாளில் உண்டான; செய்கை என் செய்கை அன்றோ - செயல் எனது செயல் அல்லவா? அன்னது - அந்த நட்புத் தருமம்; சிதையுமா யின் - அழியுமானால்; உய்வகை எவர்க்கும் உண்டோ? - (அத் தீவினை யிலிருந்து) தப்பும் வழி இந்த உலகில் யாருக்குத்தான் உண்டு (இல்லை); உணர்வு - (அதுவல்லாமல்) எங்கள் அறிவு யாவும்; மாசுண்டது அன்றோ - குற்றம் உடையதாகும் அல்லவா? உங்கள் உதவியைப் பெற்ற நாங்கள் அறிவு கெட்டு இழிவுடைவதா என்றான் அனுமன். மேலைநாள்: முன்னாள். 63 |