இலக்குவன் சீற்றம் தணிந்து பேசுதல் 4336. | மாருதி மாற்றம் கேட்ட, மலை புரை வயிரத் தோளான், தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான், சிந்தை செய்தான் - 'ஆரியன் அருளின் தீர்ந்தான் அல்லன்; வந்து அடுத்த செல்வம் பேர்வு அரிதாகச் செய்த சிறுமையான்' என்னும் பெற்றி. |
மாருதி மாற்றம் கேட்ட - அனுமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட; மலை புரை வயிரத் தோளான் - மலையைப் போன்ற உறுதியான தோள்களையுடைய இலக்குவன்; தீர்வினை சென்று - தோன்றி மறைகின்ற; நின்ற சீற்றத்தான் - சினத்தின் விடுபட்டு; ஆரியன் அருளின் - (இச் சுக்கிரீவன்) இராமனது அருட் பார்வையிலிருந்து; தீர்ந்தான் அல்லன் - (உண்மையாக) நீங்கினவனில்லை; பேர்வு அரிது ஆக - தன்னை விட்டு நீங்க முடியாததும்; வந்து அடுத்த செல்வம் - தன்னை வந்து அடுத்ததும் ஆகிய செல்வம்; செய்த - தந்த; சிறுமையான் - சிறுமையுடையவன்; என்னும் பெற்றி - என்னும் இயல்பை; சிந்தை செய்தான் - மனத்தில் நினைந்தான். 'இச் சுக்கிரீவன் எங்களை அவமதித்தான் என்று சொல்ல இயலாது. தவிர, தான் செசன்ன தவணைப்படி வராமல் இராமனது ஆணையை மீறவேண்டுமென்ற எண்ணமும் இவனுக்குச் சிறிதும் இல்லை; புதிதாகக் கிடைத்த செல்வச் செருக்கால் தான் செய்ய வேண்டிய செயலை மறந்ததனால் ஏற்பட்டது இது' என்று அனுமன் வார்த்தையால் தெளிவடைந்த இலக்குவனின் சினம் தணிந்தது. தாரையும் இதே கருத்தைச் சொன்னாள்.(4325) 68 |