4340. | 'உன்னைக் கண்டு, உம் கோன்தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி, என்னைக் கண்டனன்போல் கண்டு, இங்கு இத் துணை நெடிது வைகி, தன்னைக் கொண்டு இருந்தே தாழ்ந்தான்; அன்று எனின், தனு ஒன்றாலே மின்னைக் கண்டனையாள்தன்னை நாடுதல் விலக்கற்பாற்றோ? |
உன்னைக் கண்டு - (இராமன் முதலில்) உன்னைச் சந்தித்ததனால்; உற்ற இடத்து உதவும் பெற்றி - துன்பம் நேர்ந்த காலத்து உதவி செய்யும் தன்மைக்கு; உம்கோன்தன்னை - உங்கள் அரசனான சுக்கிரீவனை; என்னைக் கண்டனன் போல் கண்டு - என்னைத் தம்பியாகக் கொண்டிருப்பது போலத் தம்பியாகக் கொண்டு; இங்க இத்துணை - இம் மலையில் இவ்வளவு (நாள்கள் வரையில்); நெடிது வைகி - நீண்ட காலம் தங்கி; தன்னைக் கொண்டிருந்தே - தன் உயிரை அரிதாகத் தாங்கி்க் கொண்டு; தாழ்த்தான் - பொறுத்திருந்தான்; அன்று எனின் - இல்லாவிட்டால்; தனு ஒன்றாலே - தன் வில்லொன்றால்; மின்னைக் கண்டனையாள் தன்னை - மின்னலைப் போன்ற உருவத்தைக் கொண்டவளான சீதையை; நாடுதல் - தேடுதல்; விலக்கற் பாற்றோ - (மற்றவரால்) தடுக்கக் கூடிய தன்மையுடையதோ? (யாராலும் தடுக்க முடியாது). உன்னைக் கண்டதும் உன்னிடம் அருள் உண்டாக உன்மூலமாக உன் அரசனாகிய சுக்கிரீவனிடம் நட்புக் கொண்டு, இடருற்றபோது அவன் உதவுவான் என்று கருதினான்; என்னிடம் மிக்க பாசம்கொண்டு என்னைப் பாவிப்பது போன்றே அவனையும் உடன் பிறந்தவனாகப் பாவித்து உங்கள் மூலமாக இச் செயலை எளிதில் முடித்துக் கொள்ளலாம் என்று கருதினான், இராமன். அதனால் இதுவரை பொறுத்திருந்தான்; அவன் இவ்வாறு பொறுத்திருந்தது உங்களுக்குப் பெருமையைத் தருவதற்கேயாம்; வல்லமையில்லாமையாலன்று. அவன் நினைந்திருந்தால் தன் வில்லொன்றால் பகைவரை வதைத்துச் சீதையை எளிதிலே மீட்டிருக்கமுடியும் என்று இலக்குவன் அனுமனிடம் கூறினான் என்பது. ஒளியினாலும் (கொடிபோல்) ஒல்கிடும் மென்மையாலும் சீதையை 'மின்னைக் கண்டனையாள்'என்றார். 72 |