இலக்குவன் அனுமனொடு செல்லுதல்

4344.'முன்னும், நீ சொல்லிற்று
      அன்றோ முயன்றது
; முயற்றுங்காறும்,
இன்னும் நீ இசைத்த செய்வான்
      இயைந்தனம்' எனக் கூறி,
அன்னது ஓர் அமைதியான்தன் அருள்
      சிறிது அறிவான் நோக்கி,
பொன்னின் வார் சிலையினானும்,
      மாருதியோடும் போனான்.

     பொன்னின் வார் சிலையினானும் - பொன்னால் செய்யப் பெற்ற
வில்லைத் தாங்கிய இலக்குவனும் (அனுமன் நோக்கி); முன்னும்
முயன்றது -
'முன்பும் நாங்கள் மேற்கொண்ட முயற்சியும்; நீ
சொல்லிற்று அன்றோ -
நீ  சொல்லியது தானே; இன்னும் - இனிமேலும்;
முயற்றுங்காறும் -
முயற்சி மேற்கொள்ளுங் காலத்தும்; நீ இசைத்த - நீ
சொல்லியதையே; செய்வான் இயைந்தனம் - செய்வதறகு உடன் படுகிறோம்';
என்று கூறி -
என்று சொல்லி; அன்னது ஓர் அமைதி யான்தன் - (மேலே
கூறப்பட்ட) நிலையையுடையவனான சுக்கிரீவனது; அருள் சிறிது அறிவான்
நோக்கி -
மனநிலையையும் சிறிது தெரிந்து கொள்ளக் கருதி; மாருதியோடும்
போனான் -
அனுமனுடன் சென்றான்.

     சுக்கிரீவன் கார்காலம் நீங்கியவுடன் சீதையைத் தேடுவதற்கு முயலாமல்
அந்தப்புரத்தில் உறங்கிக்கிடக்கின்றமையால் அவன் 'அன்னது ஓர்
அமைதியான்' எனப்பட்டான்.  அருள் - சுக்கிரீவன் எங்களிடம் அன்பு
காட்டும் விதம்.  பொன்னின் வார்சிலை - அழகானதும் நீண்டதுமான வில்
எனினும் அமையும்.                                             76