அங்கதன் கூற்று

4349.'  ''இயைந்த நாள் எந்தை, நீ
      சென்று எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்; மெய்
      இலை'' என்ன வீங்கி,
உயர்ந்தது சீற்றம்; மற்று, ஈது
      உற்றது செய்கை; முற்றும்
நயம் தெரி அனுமன்
      வேண்ட, நல்கினன், நம்மை இன்னும்.

     எந்தை - (அப்போது அங்கதன் சுக்கிரீவனை நோக்கி) என் தந்தையே!
இயைந்த நாள் எல்லை -
(படையைத் திரட்டி வருவதாக முன்பு) ஏற்றுக்
கொண்ட காலத் தவணையில்; நீ சென்று எய்தலை - (படைகளோடு)
இராமனிடம் நீ போய்ச் சேரவில்லை; செல்வம் எய்தி வியந்தனை - பெருஞ்
செல்வத்தைப் பெற்றுச் செருக்குற்றாய்; உதவி கொன்றாய் - (அவர்கள்
செய்த) பேருதவியை மறந்துவிட்டாய்; மெய் இலை - சிறிதும்
உண்மையில்லாதவனாக ஆனாய்; என்னச் சீற்றம் வீங்கி உயர்ந்தது -
என்பதால் (இலக்குவனுக்குக்) கோபம் மிகுதியும் மூண்டது; ஈறு உற்றது
செய்கை -
 இதுதான் நடந்தசெயல்; நயம் தெரி அனுமன் - பக்குவம்
அறிந்த அனுமன்; வேண்ட - வேண்டிக் கொண்டதால்; நம்மை இன்னும்
நல்கினன் -
(அந்த இலக்குவன்) நம்மை இன்னும் உயிரோடு இருக்குமாறு
அருள்புரிந்துள்ளான்.

     அனுமன் இலக்குவனை வேண்டியிராவிடில் அப்போதே நாம்
அனைவரும் இலக்குவனால் கொல்லப்பட்டிருப்போம் என்றவாறு.  முற்றும்
நயம்தெரி அனுமன் - முன்பு தாரையைக் கொண்டு இலக்குவனது சினத்தைத்
தணித்துப் பின்னர் இனிய சொற்களால் வேண்டிக் கொண்டதைக் குறித்தது.
நயம் - பக்குவம்.                                               81