அங்கதன் கூற்று 4349. | ' ''இயைந்த நாள் எந்தை, நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி வியந்தனை; உதவி கொன்றாய்; மெய் இலை'' என்ன வீங்கி, உயர்ந்தது சீற்றம்; மற்று, ஈது உற்றது செய்கை; முற்றும் நயம் தெரி அனுமன் வேண்ட, நல்கினன், நம்மை இன்னும். |
எந்தை - (அப்போது அங்கதன் சுக்கிரீவனை நோக்கி) என் தந்தையே! இயைந்த நாள் எல்லை - (படையைத் திரட்டி வருவதாக முன்பு) ஏற்றுக் கொண்ட காலத் தவணையில்; நீ சென்று எய்தலை - (படைகளோடு) இராமனிடம் நீ போய்ச் சேரவில்லை; செல்வம் எய்தி வியந்தனை - பெருஞ் செல்வத்தைப் பெற்றுச் செருக்குற்றாய்; உதவி கொன்றாய் - (அவர்கள் செய்த) பேருதவியை மறந்துவிட்டாய்; மெய் இலை - சிறிதும் உண்மையில்லாதவனாக ஆனாய்; என்னச் சீற்றம் வீங்கி உயர்ந்தது - என்பதால் (இலக்குவனுக்குக்) கோபம் மிகுதியும் மூண்டது; ஈறு உற்றது செய்கை - இதுதான் நடந்தசெயல்; நயம் தெரி அனுமன் - பக்குவம் அறிந்த அனுமன்; வேண்ட - வேண்டிக் கொண்டதால்; நம்மை இன்னும் நல்கினன் - (அந்த இலக்குவன்) நம்மை இன்னும் உயிரோடு இருக்குமாறு அருள்புரிந்துள்ளான். அனுமன் இலக்குவனை வேண்டியிராவிடில் அப்போதே நாம் அனைவரும் இலக்குவனால் கொல்லப்பட்டிருப்போம் என்றவாறு. முற்றும் நயம்தெரி அனுமன் - முன்பு தாரையைக் கொண்டு இலக்குவனது சினத்தைத் தணித்துப் பின்னர் இனிய சொற்களால் வேண்டிக் கொண்டதைக் குறித்தது. நயம் - பக்குவம். 81 |