4350.'வருகின்ற வேகம் நோக்கி,
      வானர வீரர், வானைப்
பொருகின்ற நகர வாயில் பொற்
      கதவு அடைத்து, கற் குன்று
அருகு ஒன்றும் இல்லா வண்ணம்
     வாங்கினர் அடுக்கி, மற்றும்
தெரிகின்ற சினத்தீப் பொங்க, செருச்
      செய்வான் செருக்கி நின்றார்.

     வானர வீரர் - வானர வீரர்கள்; வருகின்ற வேகம் நோக்கி -
இலக்குவன் வரும் வேகத்தைப் பார்த்து; வானைப் பொருகின்ற -
வானத்தைச் சென்று தொடுகின்ற; நகர வாயில் - (கிட்கிந்தா) நகரத்தின்
வாயிலில் உள்ள; பொன் கதவு அடைத்து - பொன்னாலாகிய கதவுகளைச்
சாத்திக் கொண்டு; அருகு ஒன்றும் இல்லா வண்ணம் - பக்கத்தில் ஒரு சிறு
குன்றுகூட இல்லாதபடி; கற்குன்று வாங்கினர் அடுக்கி - கல்
மலைகளையெல்லாம் எடுத்துவந்து (அவ் வாயிலில்) ஒன்றன்மேல் ஒன்றாக
அடுக்கி; மற்றும் - மேலும்; தெரிகின்ற சினத்தீப் பொங்க -
வெளிப்படுகின்ற கோபத் தீயானது கொதித்தெழு; செருச் செய்வான் -
(இலக்குவனோடு) போர் செய்யும் பொருட்டு; செருக்கி நின்றார் -
செருக்குக் கொண்டு நின்றார்கள்.

     வானர வீரர்கள் நகரவாயிலின் பொற் கதவுகளைத் தாளிட்டு அவற்றின்
அருகில் பல் சிறு குன்றுகளை அடுக்கிவைத்த செய்தி முன் கூறப்பட்டது.
(4301) அதனை அங்கதன் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கிறான்.  வானைப்
பொருகின்ற நகர வாயில் - உயர்வுநவிற்சியணி.                      82