4352.'அந்நிலை கண்ட, திண் தோள்
      அரிக் குலத்து அனிகம் அம்மா!
எந்நிலை நின்றது என்கேன்? யாண்டுப்
      புக்கு ஒளித்தது என்கேன்?
இந் நிலை கண்ட அன்னை,
      ஏந்து இழை ஆயத்தோடு,
மின் நிலை வில்லினானை வழி
      எதிர் விலக்கி நின்றாள்.

     அந் நிலை கண்ட - அவ்வாறு (இலக்குவனால் நேர்ந்த) நிலை
மையைப் பார்த்த; திண்தோள் அரிக் குலத்து அனிகம் - வலிய தோள்
களையுடைய வானர சேனை; எந் நிலை நின்றது என்கேன் - எந்த
நிலைமையில் இருந்ததென்று சொல்வேன்? யாண்டுப் புக்கு - எந்த இடத்தில்
புகுந்து; ஒளித்தது என்கேன் - பதுங்கியது என்று சொல்வேன்; இந் நிலை
கண்ட அன்னை -
(குரக்குச் சேனையின்) இத்தகைய நிலைமையை நேரிலே
பார்த்த (என்) தாயான தாரை; ஏந்து இழை ஆயத்தோடு - சிறந்த
அணிகளை அணிந்த மகளிர் கூட்டத்துடனே; மீன் நிலை வில்லினானை -
மின்னல் போன்று ஒளிரும் வில்லைத் தாங்கிய இலக்குவனை; வழி எதிர்
விலக்கி நின்றாள் -
வழியிலே எதிரே சென்று வழி மறித்து நின்றாள்.

     அம்மா - வியப்பிடைச்சொல்.  இலக்குவனது திருவடி பட்ட அளவில்
வாயிற் கதவு முதலியன பொடியாய்விட்டதைக் கண்ட வானரங்கள் அஞ்சி,
உயிர் தப்பிக் கலங்கிப் போனதிசை தெரியாமல் ஓடிப் போயின; அப்போது
இலக்குவன் சினத்தோடு வர, அவனை மகளிர் கூட்டத்தோடு தாரை எதிர்
கொண்டாள் என்பது.  அனிகம் -சேனை; அனீகம் என்ற வடசொல்லின் திரிபு.
மின் நிலைவில் - நிலைத்தல் என்றும் இல்லாத மின்னல் வில்லிடம் நிலைத்து
நின்றது என்பது நயம்.                                          84