4364. | 'கேட்டெனன், ''நறவால் கேடு வரும்'' என்; கிடைத்த அச்சொல் காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால், மீட்டு இனி உரைப்பது என்னே? விரைவின், வந்து அடைந்த வீரன் மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ? |
நறவால் கேடு வரும் எனக் கேட்டெனன் - கள்ளைக் குடிப்பதால் தீங்கு விளையும் என்று (பெரியோர்) சொல்லக்கேட்டிருக்கிறேன்; கிடைத்த அச்சொல் காட்டியது - (அவ்வாறு) கூறப்படும் அந்தக் கூற்று நேர்முகமாகத் தன் வலிமையைக் காட்டிவிட்டது; மீட்டு இனி உரைப்பது என்னே - திரும்பவும் இனிமேல்சொல்ல வேண்டுவது என்ன இருக்கின்றது?அனுமன் நீதி கல்வியால் கடந்தது - அனுமனது நீதிநூல் அறிவால் மூளவிருந்த துன்பத்திலிருந்து நாம் நீங்கியது; அல்லால் - அல்லாமல்; விரைவின் வந்தடைந்த - விரைவாக வந்து சேர்ந்த; வீரன் மூட்டிய வெகுளியால் - வீரனாகிய இலக்குவனது மூட்டப்பட்ட சினத்தால்; நாம் முடிவதற்கு - நாம் இறந்தொழிவதற்கு; ஐயம் உண்டோ - ஐயம் உளதாகுமோ? அனுமன் இடத்திற்கேற்பத் தனது நுட்ப உணர்வினால் இலக்குவனது சீற்றத்தைத் தணித்திரா விட்டால் நாம் இறுதி எய்திருப்போம் என்பதில் ஐயமில்லை என்றான் சுக்கிரீவன். 'காட்டியது': நேர்முகமாக வந்து காட்டியது அனுமனது கல்வியையும் நீதியையும் புகழ்ந்து அவனால் தான் தப்பியதை யுணர்ந்து சுக்கிரீவன் கூறியது இது. 96 |