4367. உரைத்த செஞ் சாந்தும், பூவும்,
      'சுண்ணமும், புகையும், ஊழின்
நிரைத்த பொற்குடமும், தீப மாலையும்,
      நிகர் இல் முத்தும்,
குரைத்து எழு விதானத்தோடு
     தொங்கலும், கொடியும், சங்கும்,
இரைத்து இமிழ் முரசும், முற்றும்
      இயங்கின, வீதி எல்லாம்.  *

     உரைத்த செஞ்சாந்தும் - அரைத்த சிவந்த சந்தனக் குழம்பும்; பூவும்
சுண்ணமும் -
மலர்களும் நறுமணப் பொடிகளும்; புகையும் - (அகில்
முதலிவற்றின்) நறும்புகையும்; ஊழின் நிரைத்த பொன் குடமும் - முறையாக
வைக்கப் பெற்ற குடங்களும்; தீப மாலையும் - விளக்குகளின் வரிசையும்;
நிகர் இல் முத்தும் -
ஒப்புமை இல்லாத நல்ல முத்து மாலைகளும்; குரைத்து
எழு விதானத்தோடு -
ஒலித்து விளங்குகின்ற விதானங்களோடு; தொங்கலும்
-
பீலிக் குஞ்சங்களும்; கொடியும் சங்கும் - கொடிகளும் சங்குகளும்;
இரைத்து இமிழ் முரசும் -
இரைந்து ஒலிக்கின்ற முரசங்களும்; முற்றும் -
(ஆகிய) இவை யாவும்; வீதி எல்லாம் - (கிட்கிந்தா நகரத்) தெருக்களில்
எல்லாம்; இயங்கின - (சென்று) நிறைந்தன.

     இலக்குவன் வருகையை யுணர்ந்த கிட்கிந்தா நகர மக்கள் மங்கலப்
பொருள்களைக் கொண்டு வரவேற்றனர் என்பது.  அட்டமங்கலங்கள்:
கண்ணாடி, பூரண கும்பம், இடபம், வெண்கவரி, தோட்டி, திருமகள் உருவம்,
ஸ்வஸ்திகம், விளக்கு என்பன.                                   99