4369. | அங்கதன், பெயர்த்தும் வந்து, ஆண்டு அடி இணை தொழுதான், 'ஐய! எங்கு இருந்தான் நும் கோமான்?' என்றலும், 'எதிர்கோள் எண்ணி, மங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான் - சிங்க ஏறு அனைய வீர! - செய் தவச் செல்வன்' என்றான். |
அங்கதன் - வாலி மைந்தனான அங்கதன்; பெயர்த்தும் வந்து - மறுபடியும் (இலக்குவன் உள்ள இடத்திற்கு) வந்து; ஆண்டு இணை அடி தொழுதான் - அங்கே இலக்குவனுடைய இணை அடிகளை வணங்கி னான் (அப்பொழுது இலக்குவன் அவனை நோக்கி); ஐய நும்கோமான் - ஐயனே உங்கள் தலைவனாகிய சுக்கிரீவன்; எங்கு இருந்தான் - எங்கே இருக்கிறான்; என்றலும் - என்று கேட்ட அளவில் (அங்கதன் இலக்குவனை நோக்கி); சிங்க ஏறு அனைய வீர - 'ஆண் சிங்கத்தை ஒத்த வீரனே!செய் தவச் செல்வன் - (முற்பிறப்பில்) செய்த தவமாகிய செல்வத்தையுடைய சுக்கிரீவன்; எதிர்கோள் எண்ணி - (உன்னை) எதிர் கொள்ள நினைந்து; மங்குல் தோய் கோயில் - மேகம் படிகின்ற அரண்மனையினது; கொற்றக் கடைத்தலை மருங்கு - வெற்றியமைந்த தலைவாயில் புறத்து; நின்றான் என்றான் - நிற்கின்றான் என்று சொன்னான். முற்பிறவியில் சுக்கிரீவன் செய்த தவப்பயனால்தான் உமது நட்பு அவனுக்கு வாய்த்தது என்பான் அவனைச் 'செய்தவச் செல்வன்' என்றான் என்பது. இப் பிறப்பினும், வரும் பிறப்புகளிலும் தவம் உதவும் என்பதால் செய்தவம் என வினைத்தொகையால் குறித்தார். எதிர்கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர். 101 |