4372.வெம் முலை மகளிர் வெள்ளம்
     மீன் என விளங்க, விண்ணில்
சும்மை வான் மதியம் குன்றில்
      தோன்றியது எனவும் தோன்றி,
செம்மலை எதிர்கோள் எண்ணி,
      திருவொடு மலர்ந்த செல்வன்,
அம்மலை உதயம் செய்த
      தாதையும் அனையன் ஆனான்.

     செம்மலை - தலைமை பொருந்திய இலக்குவனை; எதிர்கோள்
எண்ணி-
எதிர் கொள்ள நினைந்து; திருவொடு மலர்ந்த செல்வன் -
அரசச்செல்வத்துடன் விளங்கும் சுக்கிரீவன்; வெம் முலை மகளிர்
வெள்ளம் -
விரும்பப்படும் முலைகளையுடைய வானரப் பெண்களின் கூட்டம்;
மீன் எனவிளங்க - நட்சத்திரங்களைப் போல் விளங்க (அவர்களின்
இடையில்); விண்ணில் சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது
எனவும் -
தனக்குரிய ஒளியுடன் வானில் காணப்படும் வெண்மையான
சந்திரன் மலையில்தோன்றியது போன்றும்; தோன்றி - காணப்பட்டு;
அம்மலை உதயம் செய்த- அந்த உதயகிரியில் உதித்து ஒளிவீசும்;
தாதையும் அனையன் ஆனான் - தந்தையாகிய சூரியனையும் ஒத்து
விளங்கினான்.

     சுக்கிரீவனுக்கு அவனது மகிழ்ச்சியின் சிறப்பை விளக்கச் சந்திரனும்,
அவனது அழகைச் சுட்ட உதயகிரியில் தோன்றி சூரியனும் உவமைகளாம்.
சும்மை - பேரொலி. கோள் - முதனிலை திரிந்ததொழிற்பெயர்.       104