அனைவரும் மாளிகையை அடைதல் 4374. | எழுவினும், மலையினும், எழுந்த தோள்களால், தழுவினர், இருவரும்; தழுவி, தையலார் குழுவொடும், வீரர்தம் குழாத்தினோடும் புக்கு, ஒழிவு இலாப் பொற் குழாத்து உறையுள் எய்தினார். |
இருவரும் - (இலக்குவன் சுக்கிரீவன் என்ற) அந்த இருவரும்; எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் - இரும்புத் தூண், மலை என்ற இவற்றைக் காட்டிலும் பருத்து ஓங்கிய (தம்) தோள்களால்; தழுவினர் - ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள்; தழுவி - (அவ்வாறு) தழுவிக் கொண்டு; தையலார் குழுவொடும் - வானர மகளிரின் கூட்டத்துடனும்; வீரர்தம் குழாத்தினோடும் - வீரர் கூட்டத்தோடும்; ஒழிவு இலா - எடுக்க எடுக்கக் குறையாத; பொற்குழாத்து உறையுள் - பொன்திரள் நிறைந்த அரண்மனைக்குள்ளே; புக்கு எய்தினார் - சென்ற சேர்ந்தார்கள். பொற்குழாத்து உறையுள் - நிதியறை. தோளுக்கு எழுவும் மலையும் உவமைகளாம். எழு - தூண்; இங்கு இரும்புத் தூணைக் குறித்தது. 106 |