அரியணையில் அமர்ந்திட இலக்குவன் இசையாமல் கல்தரையில் இருத்தல் 4375. | அரியணை அமைந்தது காட்டி, 'ஐய! ஈண்டு இரு' எனக் கவிக் குலத்து அரசன் ஏவலும், 'திருமகள் தலைமகன் புல்லில் சேர, எற்கு உரியதோ இஃது?' என மனத்தின் உன்னுவான், |
கவிக்குலத்து அரசன் - வானர குலத்து மன்னனாகிய சுக்கிரீவன்; அமைந்தது அரியணை காட்டி - நன்றாக அமைக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தை (இலக்குவனுக்குக்) காண்பித்து; ஐய - தலைவனே! ஈண்டு இரு என - இதில் அமர்வாயாக என்று; ஏவலும் - வேண்டவும்; திரு மகள் தலைவன் புல்லில் சேர - (இலக்குவன்) இலக்குமி தலைவனாகிய இராமன் புல்தரையில் அமர்ந்திருக்க; இஃது எனக்கு உரியதோ - இந்தச் சிம்மாசனத்தில் அமர்வது எனக்குப் பொருந்துமோ? என மனத்தின் உன்னுவான் - என மனத்தில் சிந்திப்பவனாய். . . . இலக்குமி கொழுநனான இராமன் புல்தரையில் இருக்கத் தான்மட்டும் அரியணையில் அமர்வதா என்று கருதினான் இலக்குவன். 107 |