4376.'கல் அணை மனத்தினை
     யுடைக் கைகேசியால்,
எல் அணை மணி முடி
      துறந்த எம்பிரான்
புல் அணை வைக, யான்
      பொன் செய் பூத் தொடர்
மெல் அணை வைகவும்
     வேண்டுமோ?' என்றான்.

     கல் அணை மனத்தினை உடை - கல்லைப் போன்ற மனத்தையுடைய;
கைகேசியால் -
கைகேசி பெற்ற வரத்தின் விளைவாக; எல் அணை மணி
முடி -
ஒளி பொருந்திய மணி மகுடத்தை; துறந்த எம் பிரான் - விட்டு
(கானகம்) வந்த எம் தலைவனான இராமன்; புல் அணை வைக -
புல்லாலாகிய படுக்கையிலே தங்க; யான் - நான்; பொன்செய் பூத் தொடர் -
பொன்னால் செய்யப்பட்டதும் பூக்களால் புனையப் பெற்றதுமான; மெல்
அணை வைகவும் -
மென்மையான ஆசனத்தில் தங்குதலும்; வேண்டுமோ -
விரும்பத்தக்கது ஆகுமோ? என்றான் - என்று கூறினான்.

     இலக்குவன் கைகேயி செய்த கொடுமையை மறவாமல் இருப்பதைக்
'கைகேசியால் எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்' என்னும் மொழிகள்
குறிக்கின்றன.                                                 108