4377. என்று அவன் உரைத்தலும்,
      இரவி காதலன்
நின்றனன்; விம்மினன், மலர்க்கண்
      நீர் உக;
குன்று என உயர்ந்த
      அக் கோயில் குட்டிம
வன் தலத்து இருந்தனன்,
      மனுவின் கோ மகன்.

     என்று அவன் உரைத்தலும் - என்று அந்த இலக்குவன் சொல்லிய
அளவில்; இரவி காதலன் - சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நின்றனன் -
(திகைத்து) நின்றான்; மலர்க் கண் நீர் உக விம்மினன் - தாமரை மலர்
போன்ற கண்களில் கண்ணீர் பெருக உள்ளம் பொருமினான் (அப்போது);
மனுவின் கோமகன் -
மனுவின் வழித் தோன்றிய அரசகுமாரனான
இலக்குவன்; குன்று என உயர்ந்த - மலை போல ஓங்கிய; அக் கோயில் -
அந்த அரண்மனையினுடைய; குட்டிம வன்தலத்து - கல் பரப்பப்பட்ட
மேடையில்; இருந்தனன் - அமர்ந்தான்.

     சுக்கிரீவன் கண்ணீர் உகுத்தது இலக்குவனுடைய சொற்களைக் கேட்டும்
தான் அந்நிலையில் நில்லாதது கருதியே எனலாம்.

     குட்டிமம் - வடசொல்: கல் பாவிய வலிய இடம் என்று பொருள்படும்.
                                                           109