4383. | 'அன்றியும் ஒன்று உளது; ஐய! யான் இனிச் சென்றெனன் கொணர்ந்து அடை திருத்தினால், அது நுன் துணைக் கோ மகன் நுகர்வது; ஆதலான், இன்று, இறை தாழ்த்தலும் இனிது அன்றாம்' என்றான். |
ஐய - 'தலைவனே!அன்றியும் ஒன்று உளது - (இவை) அல்லா மலும் (நான் கூற வேண்டியது) இன்னும் ஒன்று இருக்கின்றது; யான் இனிச் சென்றனென் - நான் இனித் திரும்பிச் சென்று; கொணர்ந்து - கீரை முதலியவற்றைக் கொண்டு வந்து; அடை திருத்தினால் - அந்தக் கீரை முதலியவற்றைப் பக்குவம் செய்தால்; அது நுன் துணைக் கோமகன் நுகர்வது - அதனையே உன் நண்பனும் அரசகுமாரனுமாகிய இராமன் நுகர்வதாகும்; ஆதலான் - ஆதலால்; இன்று இறை தாழ்த்தலும் - இப்பொழுது நான் இங்கே ஒரு கணமும் தாமதித்தல்; இனிது அன்றாம் - இனிமை தருவது ஆகாது; என்றான் - என்று இலக்குவன் சொல்லி முடித்தான். இராமன் பட்டினியோடு இருக்கையில் நான் இங்கே நொடிப் பொழுது தாமதிப்பதும் இனிதாகாது என்று குறிப்பித்தவாறு. அடை - இலை, கீரை, நுன்- திசைச் சொல். 115 |