4384. | வானர வேந்தனும், 'இனிதின் வைகுதல், மானவர் தலைமகன் இடரின் வைகவே, ஆனது, குரக்குஇனத்து எமர்கட்கு ஆம்!' எனா, மேல் நிலை அழிந்து, உயிர் விம்மினான்அரோ. |
வானர வேந்தனும் - (இவ்வாறு இலக்குவன் கூறக் கேட்டு) குரக் கரசனான சுக்கிரீவனும் (இலக்குவனைப் பார்த்து); மானவர் தலை மகன் - 'மனு வம்சத்தில் சிறந்தவனான இராமன்; இடரின் வைக - துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது; இனிதின் வைகுதல் ஆனது - இன்பமாகக் காலத்தைப் போக்குவதென்பது; குரக்கு இனத்து எமர்கட்கு ஆம் - வானர குலத்துப் பிறந்த எங்களைப் போன்றவர்க்கே பொருந்தும்; எனா - என்று கூறி; மேல்நிலை அழிந்து - உடம்பு நிலை குலைந்து; உயிர் விம்மினான் - உயிர் வருந்தினான். இலக்குவன் சொற்களைக் கேட்ட சுக்கிரீவன் ஆற்றாது உடல்தளர்ந்து உயிர் வருந்தினான் என்பது. மானவத் தலைமகன் - சான்றோர் தலைவன் எனினுமாம். மேல் என்பது புறவுடலாம்; உடல் எழில் குலைதலும் மனம் நோதலும் ஆகும். மேல் என்னும் சொல் இன்னும் தென்தமிழகத்தில் உடல் என்ற பொருளில் வழங்குகிறது. தென்தமிழகத்தில் மேலுக்குக் குளிச்சிட்டு வரேன் என்று பேசுதல்கண்கூடு. 116 |