அனுமனைச் சேனையுடன் வருமாறு ஏவிச் சுக்கிரீவன் இராமனிடம்செல்லுதல் 4385. | எழுந்தனன் பொருக்கென, இரவி காண்முளை; விழுந்த கண்ணீரினன், வெறுத்த வாழ்வினன், அழிந்த அயர் சிந்தையன், அனுமற்கு, ஆண்டு, ஒன்று மொழிந்தனன், வரன்முறை போதல் முன்னுவான். |
இரவி கான்முனை - சூரிய குமாரனான சுக்கிரீவன்; பொருக்கென எழுந்தனன் - விரைவாக எழுந்தான்; விழுந்த கண் நீரினன் - பெருகும் கண்ணீரையுடையவனும்; வெறுத்த வாழ்வினன் - செல்வ வாழ்க்கையை வெறுத்தவனும்; அழிந்து அயர் சிந்தையன்- வருந்தித் தளரும் மனமுடையவனுமாகி; வரன் முறை போதல் முன்னுவான் - இராமனிடம் முறைப்படி செல்ல எண்ணியவனாய்; ஆண்டு - அப்பொழுது; அனுமற்கு - அனுமனிடம்; ஒன்று மொழிந்தனன் - ஒரு சொல் சொன்னான். கான் முளை - ஒரு வம்சத்தில் தோன்றியவன். கால் - வமிசம். விழுந்த கண்ணீர், வெறுத்த வாழ்வு என்று எச்சங்களையடுக்கியதால் சுக்கிரீவன் விழிகளில் பிறரின் துயரம் கண்டு பொறாததால் தானாகப் பெருகிய கண்ணீரும், உண்மையாகவே வாழ்வில் ஏற்பட்ட வருத்தமும் கண்டு தெளியலாம். 117 |