சுக்கிரீவன் இராமனை அடைந்து தொழுதல் 4387. | அங்கதன் உடன் செல, அரிகள் முன் செல, மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல, சங்கை இல் இலக்குவன் - தழுவி, தம்முன்னின், செங் கதிரோன் மகன் கடிது சென்றனன். * |
செங்கதிரோன் மகன் - சிவந்த ஒளிக்கற்றைகளையுடைய சூரியன் மகனான சுக்கிரீவன்; சங்கை இல் - எப் பொருளிலும் ஐயம் திரிபு இல்லாத (தூய மனமுடைய); இலக்குவன் தழுவி - இலக்குவனைத் தழுவிக் கொண்டு; அங்கதன் உடன்செல - அங்கதன் தன்னுடன் வர வும்; அரிகள் முன் செல - வானரங்கள் முன்னே செல்லவும்; மங்கையர் உள்ளமும் - (அன்புள்ள) வானர மகளிரின் மனமும் பின் தொடர்ந்து வரவும்; வழியும் பின் செல - கடந்தவழிகள் பின்னே தங்கி விடவும்; தம்முனின் - தமையனான இராமனிடம்; கடிது சென்றனன் - விரைந்து சென்றான். சுக்கிரீவனுடைய காதலுக்கு உரியர் ஆகலின் மகளிர் மனம் அவன் பின் சென்றது என்றார். பின்செல: இரட்டுற மொழிதல் பின் தங்க பின்தொடர என்னும் இருபொருள் தருதலால். தம்முன்: இராமனால் தம்பியாகக் கருதப்பட்டவனாகலின் தம்முன் என்றார். அரசனுக்கு முன்பு வீரர்கள் செல்வது மரபாதலின் 'அரிகள் முன்செல' என்றார். 119 |