4389. | கொடி வனம் மிடைந்தன; குமுறு பேரியின் இடி வனம் மிடைந்தன; பணிலம் ஏங்கின; தடி வனம் மிடைந்தன, தயங்கு பூண் ஒளி; பொடி வனம் எழுந்தன; வானம் போர்த்தவே. |
கொடி வனம் மிடைந்தன - கொடிகளின் தொகுதிகள் அடர்ந்து நிறைந்தன; குமுறும் பேரியின் - முழங்குகின்ற பேரிகைக் கருவிகளின்; இடிவனம் மிடைந்தன- இடி போன்ற ஒலித் தொகுதிகள் நிறைந்தன; பணிலம் ஏங்கின - சங்குகள் ஒலித்தன; தயங்கு பூண் ஒளி - விளங்கு கின்ற அணிகளின் ஒளியாகிய; தடி வனம் மிடைந்தன - மின்னலின் தொகுதிகள் நிறைந்தன; பொடி வனம் எழுந்தன - (பூமியிலிருந்து) புழுதித் தொகுதிகள் கிளம்பின; வானம் போர்த்த - இவையெல்லாம் வானத்தை அளாவி மூடின. வனம் - இங்கே தொகுதி, மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது. மிடைந்தன என்ற ஒரு சொல் பொருளில் பல முறை வந்தது. தடி - மின்னல்; தடித் என்ற வடசொல்லின் விகாரம் என்பர். 121 |