4391. வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின், பரிதி மைந்தனும்,
தாரினின் பொலங் கழல் தழங்க, தாரணித்
தேரினில் சென்றனன், சிவிகை பின் செல.

     வீரனுக்கு இளையவன் - இராமனுக்குத் தம்பியான இலக்குவனது;
விளங்கு சேவடி -
ஒளிவிடுகின்ற சிவந்த திருவடிகள்; பாரினில் சேறலின் -
நிலத்தில் நடந்து செல்லுவதனால்; பரிதி மைந்தனும் - சூரிய குமாரனான
சுக்கிரீவனும்; தாரினில் பொலன் கழல் தழங்க - கிண்கிணி மாலைகள்
போலக் காலில் கட்டிய வீரக் கழல்கள் ஒலிக்க; (தானும் காலால் நடந்து);
சிவிகை பின் செல-
பல்லக்கு தனக்குப் பின்னே வர; தாரணித் தேரினில்-
பூமியாகிய தேரின் மேல்; சென்றனன் - சென்றான் (தரையில் நடந்தான்).

     இலக்குவன் பாதம் வருந்தப் பூமியில் நடந்து  செல்லுதலால்,
சுக்கிரீவனும் சிவிகையேறிச் செல்லாமல் தரையில் நடந்து சென்றான் என்பது.
தார் - கிண்கிணிமாலை. இலக்குவனும், சுக்கிரீவனும் ஒரு பொற்
சிவிகையிலேறிச் சென்றதாக வான்மீகி கூறுவார்.                      123