4393. | கண்ணிய கணிப்ப அருஞ் செல்வக் காதல் விட்டு, அண்ணலை அடி தொழ அணையும் அன்பினால், நண்ணிய கவிக் குலத்து அரசன், நாள்தொறும் புண்ணியன் - தொழு கழல் பரதன் போன்றனன். |
கண்ணிய - யாவரும் கருதக் கூடிய; கணிப்ப அருஞ் செல்வம் - அளவிடமுடியாத (மிகப் பெருஞ்) செல்வத்தில்; காதல்விட்டு - ஆசையை நீத்து; அண்ணலை - இராமனின்; அடிதொழ அணையும் - திருவடிகளை வணங்குவதற்குப் பொருந்திய; அன்பினால் நண்ணிய - பக்தியோடு அடைந்த; கவிக் குலத்து அரசன் - வானர குலத்தலைவ னான சுக்கிரீவன்; நாள்தொறும் - தினந்தோறும்; புண்ணியன் கழல் தொழு - புண்ணிய வடிவாகிய இராமனைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்ற; பரதன் போன்றனன் - பரதனையொத்து விளங்கினான். சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தி பரதனது பக்தியைப் போலும் என்பது. பரதன் செல்வப் பற்றுச் சிறிதுமின்றி இராமனுடைய பாதுகைகளை நாள்தோறும் வணங்கும் தன்மையன்; அரச போகத்தில் மூழ்கிக் கிடந்திடாமல் இராமனிடம் பக்திகொண்டு அப் பெருமானின் திருவடிகளை வணங்கி வரும் பரதனைச் சுக்கிரீவனுக்கு உவமைகூறினார். 125 |