அங்கதனையும் சுக்கிரீவனுடன் அனுப்பி இராமன், தம்பியுடன் வைகுதல் 4406. | அங்கதற்கு இனியன அருளி, 'ஐய! போய்த் தங்குதி உந்தையோடு என்று, தாமரைச் செங் கணான், தம்பியும், தானும் சிந்தையின் மங்கையும், அவ் வழி, அன்று வைகினான். |
தாமரைச் செங்கணான் - செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையுடைய இராமன்; அங்கதற்கு இனியன அருளி - அங்கதனுக்கு இனிமையான சொற்களைக் கூறி; ஐய - ஐய; போய் உந்தையோடு தங்குதி - போய் உன் தந்தையாகிய சுக்கிரீவனோடு இருப்பாய்; என்று - என்று விடை தந்து அனுப்பி; தம்பியும் - இலக்குவனும்; சிந்தையின் மங்கையும் - (எப்பொழுதும்) தன் மனத்தே குடியிருக்கும் சீதையும்; தானும் - தானுமாக; அன்று அவ்வழி - அந்த இரவில் அவ் இடத்திலே; வைகினான் - தங்கியிருந்தான். இராமன் இடைவிடாது சீதையை நினைத்துக் கொண்டேயிருத்தலால் 'சிந்தையின் மங்கை' என்றார். 'தம்பியும் சிந்தையின் மங்கையும் தானும் வைகினான்' - தலைமை பற்றி வந்த பால் வழுவமைதி. 138 |