அங்கதனையும் சுக்கிரீவனுடன் அனுப்பி இராமன்,
தம்பியுடன் வைகுதல்

4406.அங்கதற்கு இனியன அருளி, 'ஐய! போய்த்
தங்குதி உந்தையோடு என்று, தாமரைச்
செங் கணான், தம்பியும், தானும் சிந்தையின்
மங்கையும், அவ் வழி, அன்று வைகினான்.

     தாமரைச் செங்கணான் - செந்தாமரை மலர்போன்ற சிவந்த
கண்களையுடைய இராமன்; அங்கதற்கு இனியன அருளி - அங்கதனுக்கு
இனிமையான சொற்களைக் கூறி; ஐய - ஐய; போய் உந்தையோடு
தங்குதி -
போய் உன் தந்தையாகிய சுக்கிரீவனோடு இருப்பாய்; என்று -
என்று விடை தந்து அனுப்பி; தம்பியும் - இலக்குவனும்; சிந்தையின்
மங்கையும் -
(எப்பொழுதும்) தன் மனத்தே குடியிருக்கும் சீதையும்; தானும் -
தானுமாக; அன்று அவ்வழி - அந்த இரவில் அவ் இடத்திலே; வைகினான் -
தங்கியிருந்தான்.

     இராமன் இடைவிடாது சீதையை நினைத்துக் கொண்டேயிருத்தலால்
'சிந்தையின் மங்கை' என்றார்.

     'தம்பியும் சிந்தையின் மங்கையும் தானும் வைகினான்' - தலைமை பற்றி
வந்த பால் வழுவமைதி.                                        138