தானைத் தலைவர் தத்தம் படையுடன் வருதல்

4407. அன்று அவண் இறுத்தனர்;
      அலரி கீழ்த்திசைப்
பொன் திணி நெடு
      வரை பொலிவுறாதமுன்,
வன் திறல் தூதுவர்
      கொணர, வானரக்
குன்று உறழ் நெடும்
      படை அடைதல் கூறுவாம்:

     அன்று அவண் இறுத்தனர் - அன்றைய இரவு முழுவதும் (இராம
லக்குவர்) அந்த இடத்தில் தங்கியிருந்தார்கள்; அலரி கீழ்த் திசை - கதிரவன்
கிழக்குத் திசையிலுள்ள; பொன் திணி நெடுவரை - பொன் மயமான பெரிய
உதய மலையிலே; பொலிவுறாத முன் - விளங்கித் தோன்றாததற்கு முன்பே
(கதிரவன் உதிப்பதற்கு முன்பு); வல் திறல் தூதுவர் - மிக்க வலிமையுடைய
தூதர்கள்; கொணர - சென்று அழைக்க; குன்று உறழ் வானர நெடும்
படை-
மலையைப் போன்ற வானர சேனை; அடைதல் - வந்து சேர்ந்த
விதத்தை; கூறுவாம் - (இனி) எடுத்துச் சொல்வோம்.

     அலரி - பரவுகின்ற கதிர்களையுடையவனெனச் சூரியனுக்குக் காரணம்
குறியாயிற்று.                                                   1