தானைத் தலைவர் தத்தம் படையுடன் வருதல் 4407. | அன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்த்திசைப் பொன் திணி நெடு வரை பொலிவுறாதமுன், வன் திறல் தூதுவர் கொணர, வானரக் குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்: |
அன்று அவண் இறுத்தனர் - அன்றைய இரவு முழுவதும் (இராம லக்குவர்) அந்த இடத்தில் தங்கியிருந்தார்கள்; அலரி கீழ்த் திசை - கதிரவன் கிழக்குத் திசையிலுள்ள; பொன் திணி நெடுவரை - பொன் மயமான பெரிய உதய மலையிலே; பொலிவுறாத முன் - விளங்கித் தோன்றாததற்கு முன்பே (கதிரவன் உதிப்பதற்கு முன்பு); வல் திறல் தூதுவர் - மிக்க வலிமையுடைய தூதர்கள்; கொணர - சென்று அழைக்க; குன்று உறழ் வானர நெடும் படை- மலையைப் போன்ற வானர சேனை; அடைதல் - வந்து சேர்ந்த விதத்தை; கூறுவாம் - (இனி) எடுத்துச் சொல்வோம். அலரி - பரவுகின்ற கதிர்களையுடையவனெனச் சூரியனுக்குக் காரணம் குறியாயிற்று. 1 |