கலித்துறை 4408. | ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த வானராதிபர் ஆயிரர் உடன் வர, வகுத்த கூனல் மாக் குரங்கு ஐ - இரண்டு ஆயிர கோடித் தானையோடும், - அச் சதவலி என்பவன் - சார்ந்தான். |
அச்சதவலி என்பவன் - அந்தச் சதவலி என்னும் வானர வீரன்; ஆயிரம் ஆயிரத்து ஆனை - பத்து இலட்சம் யானைகளின்; எறுழ்வலி அமைந்த - மிக்க வன்மையோடு பொருந்திய; வானர அதிபர் ஆயிரர் - வானர சேனைத் தலைவர் ஆயிரம் பேர்; உடன்வர - தன்னைப் பின்தொடர்ந்து வர; வகுத்த - அணிவகுக்கப்பட்ட; கூனல் மா - முதுகு கூனியுள்ள பெரிய; ஐ இரண்டு ஆயிர கோடி - பதினாயிரம் கோடி; குரங்குத் தானையோடு - வானர சேனையோடு; சார்ந்தான் - சுக்கிரீவனிடம் வந்தான். எறுழ் வலி: ஒரு பொருட் பன்மொழி. சதவலி: முகத்தில் நூறு மடிப்பு களையுடையவன். வான்மீகத்தில் இப்பெயர் 'சதபலி' என்று காணப்படுகிறது. 2 |