4409. | ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை, ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத் தோன்றினான், வந்து - சுசேடணன் எனும் பெயர்த் தோன்றல். |
சுசேடணன் எனும் பெயர் தோன்றல் - சுசேடணன் என்னும் பெயரையுடைய வானர வீரன்; மேருவை ஊன்றி எடுக்குறும் - மேரு மலையையும் பேர்த்து எடுக்கவல்ல; மிடுக்கினுக்கு உரிய - வலிமையு டையதும்; தேன் தெரிந்து உண்டு - மதுவை ஆராய்ந்து பருகி; தெளிவுறு - மயக்கமின்றித் தெளிவு பெற்றனவுமான; ஆன்ற வானர சேனை பத்து நூறு ஆயிர கோடியோடு - சிறந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு; அமைய வந்து தோன்றினான் - பொருந்த வந்து சேர்ந்தான். மேருவையும் பேர்த்து எடுக்கக் கூடிய வல்லமையமைந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு சுசேடணன் வந்து சேர்ந்தான் என்பது. சுசேடணன்: இவன் வாலியின் மனைவியான தாரைக்குத் தந்தை: வருணதேவன் மைந்தன் என்றும் கூறுவர். தோன்றல்: நல்ல தோற்றமுடையவன் என்று காரணக்குறியாம். 3 |