4411. | ஐம்பது ஆய நூறாயிர கோடி எண் அமைந்த, மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப, - இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பனைத் தந்த கேசரி - கடல் என நடந்தான். |
இம்பர் ஞாலத்தும் - இந்த உலகத்திலும்; வானத்தும் - விண்ணுலகத் திலும்; எழுதிய சீர்த்தி - பொறித்த பெரும்புகழையுடைய; நம்பனைத் தந்த - சிறந்தவனான அனுமனைப் பெற்ற; கேசரி - கேசரி என்னும் வானர வீரன்; ஐம்பது ஆய நூறாயிரம் கோடி எண் அமைந்த - ஐம்பது இலட்சங் கோடி என்று கணக்கிடப் பெற்ற; மால் வரை புரை - கைலை மைையைப் போன்ற; மொய்ம்பு நெடு வானரம் - தோள்களையுடைய பெரிய வானர சேனை; மொய்ப்ப - தன்னை நெருங்கி வர; கடல் என நடந்தான் - கடல் போன்ற தோற்றத்தோடு வந்தான். சேனையோடு வந்த கேசரிக்கு அலையோடு கூடிய கடல் உவமையாயிற்று. அனுமன், தன் செயலால் மிகப் புகழ் பெற்றானாதலால் அவனை 'இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பன்' என்றார். சீர்த்தி நம்பன்; புகழ் உருவாகிய அனுமன். நம்பன்: எல்லாரும் விரும்பும் குணமுடையவன். நம்பன் : சிவன் என்னும் பொருளும் உண்டு; சிவபெருமான் அம்சமாகப் பிறந்தவன் எனவும் கொள்ளலாம். 5 |