4412. மண் கொள் வாள் எயிற்று
      ஏனத்தின் வலியின, வயிரத்
திண் கொள் மால் வரை
      மயிர்ப் புறத்தன எனத் திரண்ட
கண் கொள் ஆயிர
      கோடியின் இரட்டியின் கணித்த
எண்கின் ஈட்டம் கொண்டு, -
      எறுழ் வலித் தூமிரன் - இறுத்தான்.

     எறுழ் வலித் தூமிரன் - மிக்க வலிமையுடைய தூமிரன் என்பவன்;
மண்கொள் வாள் எயிறு -
பூமியைக் குத்தியெடுத்த ஒளியமைந்த
பற்களையுடைய; ஏனத்தின் வலியின - (திருமாலின் அவதாரமான) வராகம்
(பன்றி) போன்ற வன்மை பெற்றனவாகி; வயிரத் திண் கொள் - உறுதியான
வலிமை கொண்ட; மால் வரை - பெரிய மலையும்; மயிர்ப் புறத்தன எனத்
திரண்ட -
ஒரு மயிர்க் காலிலேயடங்கக் கூடுமென்று சொல்லும்படி உருண்டு
பருத்த உருவம் கொண்டனவும்; கண் கொள் ஆயிர கோடியின்
இரட்டியில்-
இடம் மிகுதியாகக் கொண்ட இரண்டாயிரங் கோடியாக;
கணித்த - கணக்கிடப்பட்டவையுமாகிய; எண்கின் ஈட்டம் கொண்டு -
கரடிக்கூட்டத்தை உடன் கொண்டு; இறுத்தான் - வந்து சேர்ந்தான்.

     தூமிரன்: சாம்பவானுக்கு உடன் பிறந்தவன்; ஒரு கரடித் தலைவன்.
இவனது கரடிப் படையில் ஒவ்வொரு கரடியும் திருமாலின் வராகம்போன்று
வலிமையையும், ஒரு மயிர்க் காலில் பெருமலையும் அடங்கக் கூடிய
பேருருவத்தையும் உடையன என்பது.                               6