4413. | முனியும்ஆம் எனின்அருக்கனை முரண் அற முருக்கும், தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும், இனிய மாக் குருங்கு ஈர் - இரண்டு ஆயிர கோடி அனிகம் முன் வர, - ஆன் பெயர்க் கண்ணன் - வந்து அடைந்தான். |
முனியும் ஆம் எனின் - (தனித்தனியே ஒவ்வொரு குரங்கும்) கோபங் கொள்ளுமாயின்; அருக்கனை முரண் அற முருக்கும் - சூரியனையும் வலிமை கெடும்படி அழிக்கும்; சலம் வரின் - அடங்காத பெருஞ்சினம் வந்தால்; தனிமை - தனித் தனியாகவே; தாங்கிய உலகையும் குமைக்கும் - தங்களைத் தாங்கிக் கொண்டுள்ள உலகத்தையும் குத்தியழிக்கும்; இனிய - மகிழ்ச்சியுடைய; மாக் குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி - நாலாயிரங் கோடி கொண்ட; அனிகம் முன்வர - வானர சேனைகள் தனக்கு முன்னே வர; ஆன் பெயர்க் கண்ணன் - கவாட்சன் என்பவன்; வந்து அடைந்தான்- வந்து சேர்ந்தான். சினம் கொண்டால் சூரியனையும் தனித் தனியே அழிக்க வல்லனவும், அவ்வாறே பூமியின்மீது சினம் கொண்டாலும், அதையும் குத்தி அழிக்க வல்லனவுமான நாலாயிரங் கோடி வானர சேனையுடனே கவாட்சன் என்பான் வந்தான் என்பது. சலம்: தணியாக் கோபம். அனீகம் : வடசொல் - இங்கே அணிகம் என வந்தது. ஆன் பெயர்க் கண்ணன்: கவாட்சன் என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம். கோ - பசு; அக்ஷி - கண்; கோ + அக்ஷி என்பது வடமொழிச் சந்தியின்படி கவாட்சிஎன்றாயிற்று. 7 |