4419.வகுத்த தாமரை மலர்
      அயன், நிசிசரர் வாழ்நாள்
உகுத்த தீவினை பொருவரும்
      பெரு வலி உடையான்,
பகுத்த பத்து நூறாயிரப்
      பத்தினின் இரட்டி
தொகுத்த கோடி வெம் படை கொண்டு, -
      துன்முகன் - தொடர்ந்தான்.

     வகுத்த தாமரை மலர் அயன் - வாழ்நாள் இவ்வளவே என
வரையறுத்த தாமரை யாசனத்தானான நான்முகன; நிசிசரர் வாழ்நாள் உகுத்த
தீவினை -
அரக்கர்களின் வாழ்நாளை அழித்திடும் தீவினை (ஆகிய இரு
பெரும் சக்திகளுக்கு மீறிய); பொருவு அரும் வலி உடை யான் - ஒப்பற்ற
வலிமை உடையவனாகிய; துன்முகன் - துன்முகன் என்பவன்; பகுத்த பத்து
நூறாயிரப் பத்தினின் இரட்டி -
அணி வகுக்கப்பட்ட பத்து லட்சத்தின்
இரட்டிப்பு (அதாவது இருபது லட்சம்); தொகுத்த கோடி - கூட்டிய கோடி
(அதாவது இருபதுலட்சம் கோடி); வெம்படை கொண்டு - கொடிய படைகளை
அழைத்துக் கொண்டு; தொடர்ந்தான் - தொடர்ந்து வந்தான்.

     துன்முகன் - அழகில்லாத முகத்தினன்.  நான்முகனால் அரக்கரின்
வாழ்நாள் வரையறுக்கப்பட்டுள்ளது; அரக்கர் செய்த தீவினையும் அவர்
வாழ்நாளுக்கு இறுதியை உருவாக்கியுள்ளது.  இந்த இரண்டு சக்திகளுக்கும்
மேலாகத் துன்முகனின் வலிமை அரக்கருக்கு அழிவு செய்தே தீரும் என்பது
கருத்து.                                                      13