4420. இயைந்த பத்து நூறாயிரப்
      பத்து எனும் கோடி
உயர்ந்த வெஞ் சின வானரப்
      படையொடும், ஒருங்கே, -
சயம்தனக்கு ஒரு வடிவு எனத்
      திறல் கொடு தழைத்த
மயிந்தன் - மல்
      கசகோமுகன்தன்னொடும், வந்தான்.   *

     சயம் தனக்கு ஒரு வடிவென - வெற்றியே ஓர் உருக் கொண்டது
என்று கூறும்படி; திறல் கொடு தழைக்க - போர் வன்மையால் உயர்ந்த;
மயிந்தன் -
மயிந்தன் என்னும் வீரன்; மல் கச கோமுகன் தன்னொடும் -
மற்போரில் சிறந்த கச கோமுகன் என்பவனோடும்; இயைந்த பத்து
நூறாயிரம் பத்து எனும் கோடி -
பொருந்திய நூறு லட்சங் கோடி என்ற
எண்ணுள்ள; உயர்ந்த வெம் சின வானரப் படையொடும் - மிகக் கொடிய
சினத்தையுடைய வானர சேனையோடும்; ஒருங்கே வந்தான் - ஒரு சேர
வந்தான்.

     மயிந்தனும் கசகோமுகனும் நூறு லட்சங் கோடி சேனையுடன் வந்தார்கள்
என்பது.  மயிந்தனும் துமிந்தனும் அசுவினி தேவர்களின் அமிசத்தால் பிறந்த
வானரராவர்.                                                  14